Tuesday, June 28, 2016

சோதனையும் சாதனையும்

Posted by Unknown on 7:13 PM with No comments
சோதனையுள் சாதனைகள் மறைந்தி ருக்கும்
       சூட்சமத்தை நாம்உ ணர்ந்து கொள்ள வேண்டும்
சோதனையைச் சாதனையால் முறிய டித்து-நல்
       சொர்க்கத்தை இப்புவியில் காண வேண்டும்!

உழைப்பினுள் மறைந்த்துள்ள "உயர்வு தன்னை"
         உதாசினம் செய்யாது உணர வேண்டும்!
உழைப்புக்குச் செயல்வடிவம் தந்து-அந்த
          உயர்இமய உச்சியிலே நிற்க வேண்டும்!

தனக்குள்ளே தூங்குகின்ற தன்மா னத்தைத்
    தயங்காது தட்டியே எழுப்ப வேண்டும்!
பாலைவனம் பசும்சோலை ஆகிவிடும்-நம்
    பாருக்குள் தேனாறு புகுந்து விடும்!

சோம்பலில்  மறைந்துள்ள சுருசு ருப்பைச்
    சொல்லாமல் சோர்வின்றிப் பணியில் காட்டு!
ஆம்பல்போல் தலைதூக்கி உயரும் வாழ்வு  
    அவனியிலே உனக்கில்லை  என்றும் தாழ்வு!


சிந்திப்போமா?

உண்ணும் உணவு உடல்முழுதும் பாயும்
    எண்ணிய எண்ணங்கள் எங்குமே பாயும்!
எண்ணத்தில் எழுகின்ற ஒழுங்கற்ற ஆசையே இன்னலின் ஆணிவேர்!
   இப்புவியில் எழுகின்ற இன்னலின் ஆணிவேர்!

துணிவான நேர்முக அணுகுமுறை உள்ளோர்க்குத் 
    துணை நின்று தெய்வம் வெற்றிவாகை சூடும்!
வாழ்க்கையில் வெற்றிபெற "நண்பர்கள்" தேவை 
    வாழ்வெல்லாம் வெற்றிபெற எதிரிகள் தேவை!


எது பெரிது?

வெற்றிதரும் இனிமையைக் காட்டிலும் மாந்தர்க்குத் 
தோல்விதரும் பாடமே உயர்ந்த பாடம்!


இளமைதரும் சக்தியைக் காட்டிலும் புவியோர்க்கு 
முதுமைதரும் அனுபவமே சிறந்த பாடம்!

உறவுதரும் இன்பத்தை காட்டிலும் மாந்தர்க்குப்  
பிரிவுதரும் துன்பமே பெரிய பாரம்!

வசதித்தரும் வளமான வாழ்வைவிட அனைவர்க்கும் 
வறுமை தரும் போராட்டம் பெரிய தாகும்!

பணம்தரும் சொர்க்கத்தை காட்டிலும் மாந்தர்க்குப் 
பண்புதரும் பாசமே பெரிய தாகும்!

விதித்தரும் மரணத்தை காட்டிலும் மாந்தர்க்கு
மதித்தரும் நல்வாழ்வே சிறந்த பாடமாகும்!


வாழ்க்கை
 

வாழ்க்கை ஒருபரிசு; அதை ஏற்கவேண்டும்-ஏற்று 
வையத்தார் புகழவாழ்ந்து காட்ட வேண்டும்!
வாழ்க்கை ஒருஅழகு அதைக்  கொள்ள வேண்டும்-நம் 
வாழ்நாளில் அதனை ரசித்து செல்லவேண்டும்!

வாழ்க்கை ஒரு உணர்வு அதை ஏற்கவேண்டும் 
விளையாஉன் உணர்வோடு சேர்க்க வேண்டும்!
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் ஏற்கவேண்டும்-ஏற்று 
 என்றும்கை நழுவாது பார்க்க வேண்டும்!


வாழ்க்கை ஒரு கடமை அதை ஏற்கவேண்டும் -ஏற்று 
வரும்துயரை வென்றுபுகழ்  சேர்க்க வேண்டும்!
வாழ்க்கை ஒரு இலக்கத்தை அடைய வேண்டும்  அடைந்து 
இன்னல்வென்று இலக்கினை அடையவேண்டும் !

0 comments:

Post a Comment